மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் துணை முதல்வருமான அஜித்பவார், கடந்த ஜனவரி 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். அடர் பனிமூட்டத்தால் பாதை தெரியாமல் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அஜித்பவாரின் மரணம் தொடர்பாக அவரது உறவினரும் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி எம்எல்ஏவுமான ரோகித் பவார் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் ரோகித் பவார் பேசியதாவது:
* விமானத்தை இயக்கிய கேப்டன் சுமித் கபூர், ஏற்கனவே மது அருந்தியதற்காக 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த விமானத்தை இயக்க அனுமதித்தது ஏன்?
* விபத்துக்குள்ளான விஎஸ்ஆர் நிறுவனத்தின் விமானம் ஏற்கனவே ஒரு முறை விபத்தில் சிக்கியுள்ளது. 2023ல் நிகழ்ந்த அந்த விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் விஎஸ்ஆர் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படாதது ஏன்?
* இது வெறும் விபத்து அல்ல, இதில் சதி திட்டம் நிகழ்ந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். விபத்து நிகழ்ந்த விமானத்தை கேப்டன் சாஹில் மதன் மற்றும் யாஷ் ஆகியோர் தான் இயக்கவிருந்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அவர்கள் விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததாகவும் அதனால் சுமித் கபூரும் ஷாம்பவி பதக்கும் விமானத்தை இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால், கபூரும் ஷாம்பவியும் எப்படி விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தார்கள்? அவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலேயே வசித்து வந்தார்களா?
* லியர்ஜெட் விமானத்தை இயக்க கபூரை விட அதிக அனுபவம் வாய்ந்த ஷாம்பவி பதக் ஏன் விமானத்தை இயக்கவில்லை? விமானம் சாய்ந்த போது எந்த தகவலும் தெரிவிக்காமல் கபூர் ஏன் அமைதியாக இருந்தார்? பாதை ஒழுங்காக தெரியாத போதும் அவர் ஏன் விமானத்தை தரையிறக்க முயன்றார்?.
* விஎஸ்ஆர் விமான நிறுவனம் மீதும் விமானி சுமித் கபூர் மீதும் கடும் சந்தேகங்கள் எழுகிறது. எனவே தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், சிவில் விமானப் பாதுகாப்புக்கான விசாரணை மற்றும் பகுப்பாய்வு பணியகம், இங்கிலாந்தைச் சேர்ந்த விமான விபத்து புலனாய்வு பிரிவு (ஏஏஐபி) மற்றும் பிற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளுடன் இந்திய விசாரணை அமைப்புகள் சேர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும்.
* விஎஸ்ஆர் விமான நிறுவனத்திற்கும் டிஜிசிஏ அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விமான நிறுவனம் இந்த வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க வாய்ப்புள்ளது. முழுமையாக விசாரணையை நடத்த முடியாமல் போவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதால், அஜித்பவார் மரண வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். விஎஸ்ஆர் நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் அஜித்பவார் மரணத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என்று சரத்பவார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
