அசாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் உள்ள துத்னோய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ‘‘அசாமில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடந்து வருகிறது. அசாமில் உள்ள பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான செயல் திட்டத்தை பிரதமர் மோடியும், அசாம் முதல்வர் ஹிமந்தாவும் இணைத்து உருவாக்கி உள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி அமைய வேண்டும். எங்கள் கட்சிக்கு இன்னொரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் வேற மாதிரி அசாமை நீங்கள் பார்ப்பீர்கள். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பழங்குடியினரின் நலனைப் பற்றிப் பேசியதே இல்லை. அக்கட்சியின் தொடர் ஆட்சிக்காலங்களில் பழங்குடியின வளர்ச்சிக்காக வெறும் 25,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடி பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 1.38 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.பொது சிவில் சட்டத்தால் பழங்குடியினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அவர்களைப் பயமுறுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி வதந்திகளைப் பரப்பி வருகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல். ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பத்திற்கும் ஒரு பசுவும், ஒரு எருமையும் வழங்கப்படும். கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் நான், இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வேன்’’ என்றார்.
