வாஷிங்டன்: இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலும் நிறுத்துவதாகவும், அமெரிக்க உணவு மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி அல்லது வெகுவாக வரியை குறைக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து சமீபத்தில் இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து வெள்ளைமாளிகை சுருக்க அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என வெள்ளைமாளிகை அறிக்கை புகழ்ந்துள்ளது. இது, 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சந்தையை அமெரிக்க பொருட்களுக்கு திறக்கும் என்றும் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்திய இறக்குமதிகள் மீதான கூடுதல் 25 சதவீத வரியை நீக்க அதிபர் டிரம்ப் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவு, விவசாய பொருட்கள் குறிப்பாக அதிக புரதம், ஊட்டச்சத்து நிறைந்த கால்நடை தீவனங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் மீதான வரியை முழுமையாக நீக்கவும், குறைக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்தியா ரூ.45 லட்சம் கோடிக்கு மேல் அமெரிக்க எரிசக்தி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், விவசாய நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை வாங்க உறுதிபூண்டுள்ளதாகவும் கூறி உள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சேவைகள் மற்றும் முதலீடு, தொழிலாளர் மற்றும் அரசாங்க கொள்முதல் உள்ளிட்ட மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு வரி 19% ஆக குறைப்பு
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டததைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான வரியை 19 சதவீதமாக குறைக்க டிரம்ப் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பருத்தி, செயற்கை இழைகளை வாங்க வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது. சமீபத்தில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 25 விமானங்களை வாங்கவும் சம்மதித்துள்ளது. இதன் அடிப்படையில் முதலில் 37 சதவீதமாக இருந்த வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 19 சதவீதமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
* ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா முயற்சி: வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் குற்றச்சாட்டு
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அளித்த பேட்டி: அமெரிக்க நாடு, இந்தியா மற்றும் பிற பிரிக்ஸ் உறுப்பினர்கள் போன்ற முக்கிய மூலோபாய பங்காளிகளுடனான எங்களுடைய வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் ராணுவ-தொழில்நுட்ப உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. மேற்கு நாடுகள் அதன் முன்னாள் ஆதிக்க நிலைகளை விட்டுக்கொடுக்க தயங்குகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வருகையுடன், போட்டியாளர்களை அடக்குவதற்கான நெருக்கடிகள் வெளிப்படையானதாக உள்ளது.
கடந்த ஆண்டு அதிபர் புடினுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் குறித்த அமெரிக்காவின் முன்மொழிவை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. இருப்பினும், நடைமுறையில் இதற்கு நேர்மாறாக நிகழ்கிறது. புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன. ஐநா கடல் சட்டங்களை மீறி சர்வதேச நீரில் டேங்கர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவும் பிற நெருங்கிய நாடுகளும் மலிவு விலையில் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை ஊக்கப்படுத்துவதில்லை. இதனால், பொருளாதாரத் துறையில், அமெரிக்கா பொருளாதார ஆதிக்கத்தின் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
ஐரோப்பா உட்பட கண்டங்கள் முழுவதும் உள்ள அனைத்து முன்னணி நாடுகளுக்கான அனைத்து எரிசக்தி விநியோக வழிகளையும் கட்டுப்படுத்துவதை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியா, சீனா, இந்தோனேசியா மற்றும் பிரேசில் போலவே, அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சக்தி உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க திறந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்கர்களே செயற்கையான தடைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.
