லாஸ் ஏஞ்சல்ஸ்: முன்னாள் கணவர் டேவ் நவரோ தனக்கு காதலைக் கற்றுக்கொடுத்ததாக நடிகை கார்மென் எலெக்ட்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை கார்மென் எலெக்ட்ராவும், இசைக்கலைஞர் டேவ் நவரோவும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2007ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பிரிந்த பின்பும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து பேசி வருவதுடன், வாழ்க்கையின் இக்கட்டான சூழல்களில் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கார்மென் எலெக்ட்ரா அளித்துள்ள பேட்டியில், ‘டேவ் நவரோவைச் சந்திப்பதற்கு முன்பு வரை நான் ஒரு ஆண்பாவனை கொண்ட பெண்ணாகவே இருந்தேன். எனக்கும் காதலுக்கும் வெகுதூரம் இருந்தது. அவர்தான் எனக்குள் இருந்த பெண்மையை உணரச் செய்ததுடன், ஒருவரிடம் எவ்வாறு அன்பாகவும் காதலுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தார். எங்களுக்குள் விவாகரத்து பெற்ற பின்னரும் அவர் எனது ஆத்மார்த்தமான நண்பராகவும், இனிமையான மனிதராகவும் விளங்கி வருகிறார். இப்போதும் அடிக்கடி இருவரும் செல்போன் வாயிலாகப் பேசிக் கொள்வோம்’ என்று தெரிவித்தார்.
