மருத்துவமனை அவலத்தை சுட்டிக்காட்டி சொந்த அரசை விளாசிய பாஜக பெண் எம்எல்ஏ: பீகார் பேரவையில் எதிர்கட்சிகள் பலத்த ஆதரவு

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் மருத்துவமனைகளின் அவல நிலை குறித்து பாஜக பெண் எம்எல்ஏ கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல நாட்டுப்புறப் பாடகி மைத்லி தாக்கூர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளரை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 வயதே ஆன இவர், பீகார் சட்டப்பேரவையின் மிக இளவயது எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றவர்.

நாட்டுப்புறப் பாடகியாகப் புகழ்பெற்ற இவர், அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது தொகுதி மக்களின் நலனுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று பீகார் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தனது சொந்த தொகுதி மருத்துவமனைகளின் அவல நிலை குறித்து மைத்லி தாக்கூர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ‘அலிநகர் தொகுதி அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது; மேற்கூரை பிளாஸ்டர்கள் பெயர்ந்து விழுவதுடன், மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவுகிறது’ என்று அவர் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த (பொறுப்பு)அமைச்சர் பிரமோத் சந்திரவன்ஷி, ‘விரைவில் 12,000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’ என்று கூறியபோது, அதனை ஏற்க மறுத்த மைத்லி, ‘அமைச்சரின் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை’ என்று சபையிலேயே ஆவேசமாகத் தெரிவித்தார்.

‘பல ஆண்டுகளாகச் சீரமைப்புப் பட்டியலில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று கூறிய அவர், ‘சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இவரது இந்தப் பிடிவாதமான கேள்விகளால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளான நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி மைத்லி தாக்கூருக்குத் தங்களது பலத்த ஆதரவைத் தெரிவித்தனர்.

Related Stories: