எலச்சிபாளையம் வட்டாரத்தில் மின்மோட்டார்கள் தொடர் திருட்டு போலீசில் விவசாயிகள் புகார்

திருச்செங்கோடு, பிப்.10: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய தோட்டங்களில் உள்ள மின்மோட்டார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28ம்தேதி, வையப்பமலை அடுத்த மின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ்குமார் என்பவரது தோட்டத்தில் இருந்த மின் மோட்டார் திருடப்பட்டது. அதேபோல், பிப்ரவரி 7ம் தேதி இரவு, கோக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவராஜன் என்பவரது தோட்டத்தில் ஏர் கம்பரசருடன் கூடிய மின் மோட்டார் திருடப்பட்டது.

இதேபோல் தொடர்ந்து வையப்பமலை, மொஞ்சனூர், பெரியமணலி, சின்னமணலி, கோக்கலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் மோட்டார் திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலச்சிபாளையம் போலீசில் புகாரளித்தனர். மோட்டார்களை திருடும் மர்ம நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், திருட்டு போன மோட்டார்களை மீட்டுத்தர வேண்டும் என புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இரவுநேர ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.

Related Stories: