நாமக்கல், ஏப்.20: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று சுமார் 52 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ.20 லட்சத்திற்கு விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின்ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம். நேற்று உழவர் சந்தையில், விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
மொத்தம் 182 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 42,915 கிலோ காய்கறிகள், 9,690 கிலோ பழங்கள் மற்றும் 30 கிலோ பூக்கள் என 52,635 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 10,527 பொதுமக்கள் உழவர் சந்தையில், காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் விற்பனையான காய்கறி மற்றும் பழங்களின் மொத்த மதிப்பு ரூ.19 லட்சத்து, 99 ஆயிரத்து 940 என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
