×

ஆந்திராவில் மக்கள் தொகையை அதிகரிக்க செயல் திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருமலை: ஆந்திராவில் மக்கள் தொகை உயர ஏப்ரல் மாதம் முதல் புதிய செயல் திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜிஎஸ்டிபி மற்றும் தனிநபர் வருமானம் குறித்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்களால் ஏற்பட்ட அதிகப்படியான கடன்களால் ஆந்திரப் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அவர்கள் வாங்கிய கடன்களுக்கு 14% வட்டி செலுத்தி வருகிறோம். வட்டியைக் குறைக்க கடன் மதிப்பீட்டை அதிகரித்து கடன்களை மறு அட்டவணைப்படுத்துகிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜிஎஸ்பி மற்றும் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஆந்திராவை எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக அறிவிப்போம். மக்கள்தொகை அடிப்படையில், பல நாடுகளில் முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் 20 நாடுகளில் வயதான பிரச்னை உள்ளது. இதனால் அந்த நாடுகள் தனிமையாகிவிட்டது. எனவே மக்கள் தொகை அதிகரிக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் மக்கள் தொகை மேலாண்மை கொள்கை உருவாக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் மக்கள் தொகை உயர்வு உண்டாக செயல் திட்டம் தொடங்கப்படும். சாதாரண பிரசவங்களை அதிகரிக்க வேண்டும். சிசேரியன் அறுவை சிகிச்சைகளைக் குறைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Amaravati, Andhra Pradesh ,Chief Minister… ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...