புதுடெல்லி: தற்போது அமலில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961க்கு பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இதற்கான வருமான வரி வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், வருமான வரி விதி 2026ன் படி, ஒரு நபரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் ஒரு நிதியாண்டில் மொத்தம் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் அல்லது பணத்தை எடுக்க பான் எண் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனை தகவல்களை வங்கிகள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கும். மேலும், தற்போது ஒரே நாளில் ரூ. 50,000க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் எண் கட்டாயமாக உள்ளது.
ரூ.1 லட்சத்திற்கு குறைவான ஓட்டல் பில்களுக்கு பான் எண் தருவது அவசியமில்லை. ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் வாங்கும் போது பான் கட்டாயம் தர வேண்டும். வங்கி கணக்கு அடிப்படையிலான இன்சூரன்ஸ்களுக்கு பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் வீட்டு வாடகைப்படி சலுகையில் பெங்களூரு, புனே, அகமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்கள் பெருநகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சி நிறுவனங்களும் பரிவர்த்தனை தகவல்களை வருமான வரித்துறையிடம் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தில் தற்போதுள்ள 511 விதிகள் 333 ஆகவும், 399 படிவங்கள் 190 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசித்த பிறகு மார்ச் முதல் வாரத்திற்குள் புதிய வருமான வரி விதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
