×

எம்பிக்களின் அச்சுறுத்தலால் அல்ல ராணுவ தளபதி புத்தக பிரச்னைக்கு பயந்தே மோடி அவைக்கு வரவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேச வரும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. பிரதமரை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. பிரதமர் மோடி எம்பிக்களுக்கு பயந்து அவைக்கு வராமல் இருக்கவில்லை. நான் எழுப்பிய, முன்னாள் ராணுவ தளபதி நரவனே புத்தக விவகாரத்திற்கு பயந்து தான் அவைக்கு வரவில்லை.

ஏனென்றால் அவரால் உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை. அவர் அவைக்கு வருவதற்கு முதலில் துணிச்சல் வேண்டும். யாராவது பிரதமர் மோடியை தாக்கப் போகிறேன் என்று கூறியிருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யுங்கள் என நான் கூறியிருந்தேன். ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை? கல்வானில் என்ன நடந்தது என்பது பற்றி நரவனே புத்தகத்தை நான் மேற்கோள் காட்டி பேசிய போது அவர்கள் என்னை பேச விடவில்லை. அவையை 3-4 முறை முடக்கினார்கள். அந்த புத்தகம் வெளியிடப்படவில்லை என்றார்கள். புத்தகத்தை மேற்கோள் காட்டக் கூடாது என்றார்கள். நானும் சரி என்று, அந்த புத்தகத்தை பற்றி ஒரு இதழில் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டினேன். அதையும் கூடாது என்றார்கள். சரி என்று, இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை பற்றி பேச முயன்றேன். அதைப் பற்றி நான் பேசுவதையும் அவர்கள் விரும்பவில்லை.

நரவனேவின் புத்தகம் வெளியாகவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தவறான தகவலை அவைக்கு கூறினார். அந்த புத்தகத்தின் பிரதி எங்களிடம் உள்ளது. அதை பிரதமர் மோடியின் கையில் கொடுத்துவிடுவேனோ என்றும் பிரதமர் மோடி பயந்தார். ஜனாதிபதி உரையின் போது எதிர்க்கட்சித் தலைவரையும் முழு எதிர்க்கட்சியையும் பேச அனுமதிக்காதது பெரிய பிரச்னை. அவர்களின் உறுப்பினர்களில் ஒருவர் சில புத்தகங்களை மேற்கோள் காட்டி இழிவான கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் எதுவும் சொல்லப்படவில்லை.

அவர்கள் எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் எதிர்க்கட்சியால் பேச முடியாது என்பதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், பிரதமரைத் தாக்க சதி செய்ததாக பெண் எம்பிக்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள். இந்தக் கருத்துக்களை நாங்கள் கூற அனுமதிக்கப்படுவோம், அதன் பிறகு விவாதம் நடைபெறும் என்பதுதான் ஒப்பந்தம். விவாதம் நடைபெற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால் அரசு தரப்பு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஆளும்தரப்பு விவாதம் நடத்த அஞ்சுகிறது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து என்றார்.

* பட்ஜெட் விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை
பட்ஜெட் மீதான விவாதம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘‘பட்ஜெட் மீதான விவாதம் நடந்தால், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், அது செய்யப்பட்ட விதம் மற்றும் விவசாயிகளின் மீதான அதன் தாக்கம் ஆகிய பிரச்னைகள் விவாதிக்க வேண்டியது இருக்குமே என அரசு அஞ்சுகிறது. இந்த விவாதத்தை நடத்தவும் அரசு தரப்பு கவலைப்படுகிறது என்று நான் யூகிக்கிறேன். அதன் காரணமாக, பட்ஜெட் விவாதத்தை நடத்த அவர்கள் விரும்பவில்லை. அதனால் அவையை முடக்குகின்றனர்’’ என்றார்.

Tags : Modi ,Rahul Gandhi ,New Delhi ,Speaker ,Om Birla ,Lok Sabha ,
× RELATED எஸ்ஐஆர் பணியில் இடையூறு ஏற்படுத்த...