மதவாத சக்திகளுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு பாடம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

தண்டையார்பேட்டை: வடசென்னை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், சென்னை மண்ணடி, தம்புசெட்டி தெருவில் நேற்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் வாழும் சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக, தற்போது 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 7 சதவீதமாக உயர்த்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவ முன்னாள் தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில். சீன ஊடுருவலின்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 2 எம்.பிக்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டதை கண்டிக்கிறோம். வடமாநிலங்களில் மதவெறுப்பை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜ கட்சி, தமிழகத்திலும் காலூன்ற துடிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதவாத சக்திகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி வைத்திருப்பவர்கள் மாபெரும் தோல்வியை தழுவக்கூடிய நிலையை ஏற்படுத்தி, தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அப்துல் கரீம், சபீர் அலி, அன்சாரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: