நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் ஒளிந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது: மமக தொடக்க ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி ஒளிந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சி 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கி கட்சியின் கொடியை ஏற்றி, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ப.அப்துல் சமது எம்எல்ஏ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைய்னுல் ஆபீதின், மாநில செயலாளர் எம்.முஹம்மது முஸ்தபா, அமைப்புச் செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி, தலைமை பிரதிநிதி சிராஜ்தீன், தலைமை அலுவலக செயலாளர் வழக்கறிஞர் அமீன் அஹமத், மத்திய வடக்கு மாவட்ட தலைவர் எல்.தாஹா நவீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக நலனுக்காக மனிதநேய மக்கள் கட்சி கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில், 14 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்று இருக்கிறது. மனிதநேய கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் எப்படி அனைவரையும் ஒருங்கிணைத்தாரோ அதே போல் இந்த தேர்தலிலும் அனைவரையும் ஒருங்கிணைப்பார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி ஒளிந்து கொள்வது மிகவும் கேவலமான ஒரு செயலாகும். பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க முன் வந்தார்கள் என்பது உளவுத்துறை சொல்லும் பொய். பாஜக ஆட்சி தொடங்கியவுடன் மீண்டும் மணிப்பூர் பற்றி எரிகிறது அதை பற்றி உளவுத்துறை தெரிவிக்கவில்லையா?.

மனிதநேய கட்சி தொடங்கிய 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டோம். 2014 நாடாளுமன்ற தேர்தல் தனி சின்னத்தில் போட்டியிட்டோம். 2016 சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டோம். இப்போது தனி சின்னத்தில் போட்டியிட ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த முறை எங்களுக்கு விருப்பமான தொகுதியை கேட்டு பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: