பராசக்தி படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ​சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு. வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது. படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை, தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், படம் நாளை (இன்று) ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஓடிடியில் படத்தை வெளியிட எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல் விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: