தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள்

*வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கல்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் 21வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3ம் தேதி மாலை தொடங்கியது.

38 மாவட்டங்களிலிருந்து பார்வை குறைபாடுடையோர், அறிவு குறைபாடுடையோர், உயரம் குறைவானர்கள், மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மூலம் 100 மீட்டர், 200, 400, 800, 1500, 5000 மீட்டர் ஓட்டம், ரிலே ஓட்டப் போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்பட 261 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் புள்ளிகளின் அடிப்படையில் 50 பேர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் முத்துச்செல்வன், செயலாளர் செந்தில், பாரா விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித்குமார், கர்நாடக மாநில தடகள சங்க பொதுச் செயலாளர் ராஜவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் வழங்கினர்.

Related Stories: