- யூனியன் அரசு
- நெல்லை
- நாகர்கோவில்
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பாராளுமன்ற
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
நெல்லை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து நெல்லை, நாகர்கோவிலில் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கடந்த 1ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் வழக்கம்போல் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவாக உள்ளன. இந்நிலையில் நெல்லை மாநகரம் முழுவதும், ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோழி முட்டை படத்தை போட்டு, ஒன்றிய அரசின் 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி 0 என்பதை குறிப்பிடும் வகையில் போஸ்டர்கள் காணப்படுகின்றன.
இதேபோல் ‘ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்னும் தலைப்பில் நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் ஒட்டியுள்ள போஸ்டர்களில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை, தமிழ்நாட்டின் குடிநீர் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.3 ஆயிரத்து 112 ேகாடி நிதி வழங்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதியில்லை. மாநிலங்களுக்கு 50 சதவீதம் பகிர்வை மாநில அரசு வலியுறுத்தியும், அதற்கான அறிவிப்பு இல்லை. எந்த வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எவ்வித அறிவிப்பும் இல்லை.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பின்னடவை போக்க எவ்வித திட்டமும் இல்லை என பல அம்சங்களை தெரிவித்துள்ள அந்த போஸ்டரில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘நெல்லை மக்களே சிந்திப்பீர்’ என அந்த போஸ்டர்களில் தேர்தலை ஞாபகப்படுத்தும் வாசகங்களும் காணப்படுகின்றன. நாகர்கோவில்: ஒன்றிய பட்ஜெட்டால் அதிருப்தியடைந்த அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ‘முட்டை’ அதாவது ஒன்றுமில்லை அல்லது பூஜ்ஜியம் வழங்கியதாக கருதி மாநிலம் முழுவதும் போஸ்டர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாஜ-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி, முட்டை என்ற வாசகத்துடன், பெரிய முட்டை படத்தை போட்டு நாகர்கோவில் உட்பட முக்கிய நகரங்களில் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது சமூக வலைதளங்களிலும் #NDABetraysTN மற்றும் #Budget2026 ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் வைரலாகியது.
