தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச விழா தேரோட்டம்: பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்

 

தர்மபுரி: தர்மபுரி சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பெண்கள் மட்டும் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுப்பது பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த வாரம் துவங்கியது.

ஒரு வாரமாக தினமும், கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், நேர்த்திக்கடன் செலுத்துவோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Related Stories: