நெல்லை: தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகம் 3வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் தமிழ் கடவுள் முருகனின் பக்தி பாடலான மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை குகனே வேலையா என்று பாடுவதற்கு பதிலாக ‘‘வருவாய் எங்கள் தளபதியே வருவாய் வெற்றிக்கழகமே’’ என பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார். முருகனின் பாடலை இழிவு படுத்தியது முருக பக்தர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. இதற்கு காரணமான நடிகர் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
