மதுரை: திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் வனவிலங்குகள் பயன்பெற்று வருவதால் அணையை இடிக்கக் கூடாது. வனத்துறையால் அணை சேதப்படுத்தப்பட்டிருப்பின் அதை மீண்டும் வனத்துறையே சீரமைத்து தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில் குணசீலன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.
இவர், இப்பகுதி ஓடைகளில் இருந்து வரும் தண்ணீரை மறித்து அனுமதியின்றி சொந்த பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் கனஅடியில் 2 நீர்த்தேக்க அணைகளை கட்டி கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், விவசாயிகள் அவரிடம் கேட்டபோது, ‘‘எனக்கு சொந்தமான இடத்தில்தான் அணைகளை கட்டியுள்ளேன். யாரும் கேள்வி கேட்க முடியாது’’ எனக்கூறி அனுப்பி விட்டார். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து வனக்குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து அணைகள் கட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘எனது இடத்திற்கான ஆவணங்கள் உள்ளன’ என கூறியுள்ளார். இதையடுத்து வனத்துறையினர் அந்த நில ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு 6 மாதம் அவகாசம் அளித்தனர். ஆனால் அவர் நில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து வனத்துறையினர் நேற்று 2 நீர்த்தேக்க அணைகளையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைத்து அதில் தேக்கி வைத்திருந்த 60 ஆயிரம் கனஅடி நீரை கீழே உள்ள கோம்பை அணிக்கு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்படி ஏற்பாடு செய்தனர்.
