திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் பிரபுசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பிரிவு மருத்துவர்களுக்கும் ஊதிய உயர்வு, விருப்ப ஓய்வு பெறுவதில் அனுமதி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவர்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று டாக்டர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை துவங்கினர்.
இதில், சீனியாரிட்டி முறையை தீர்மானிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். விருப்ப ஓய்வுபெற 2 துறை மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ள திட்டத்தை, அனைத்து துறை மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கடின பணிக்கு வழங்கப்படும் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுடன் அதற்கான ஊதிய நிர்ணயமும் அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத பட்சத்தில், வரும் பிப்ரவரி 2ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு மருத்துவர்களின் தர்ணா போராட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 6ம் தேதி புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் 2 மணி நேர புறக்கணிப்பு போராட்டம் பெறும். இதற்கும் சுமூக முடிவு ஏற்படாவிட்டால், வரும் 7ம் தேதி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி, போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு டாக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
