கீழ்வேளூர் அருகே

கீழ்வேளூர், ஜன. 29: கீழ்வேளூர் அருகே ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள மின் வயர்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவராஜ் (58). இவர் கீழ்வேளூர் அடுத்த வடகரை வங்காரமாவடியில் இறால் பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இறால் பண்ணையில் உள்ள கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த செப்பு கம்பி கொண்ட மின் வயரை மர்மநபர்கள் திருடி செல்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள், சிவராஜிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இறால் பண்ணையில் இருந்த மின் ஒயர்களை திருடி சென்றதை சிவராஜ் உறுதி செய்தார்.

இதையடுத்து வங்காரம்மாவடி சுடுகாட்டில் வயர்களின் ரப்பர் எரியும் வாடை வருவதாக சிவராஜிக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் சிவராஜ், சுடுகாட்டுக்கு சென்று பார்த்தபோது 2 பேர், மின் வயர்களை எரித்து உள்ளே உள்ள செப்பு கம்பிகளை எடுத்து கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் பிடித்து கீழவேளூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கீழையூர் அருகே சடையன்கோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த அர்ச்சுணன் மகன் சக்திவேல் (29), சந்திரன் மகன் சுந்தர் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.92 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பி வயர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: