சென்னை: சென்னை ஐஐடியில் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்ட என்- ஜென் (நியூ ஜெனரேசன்) துணை அஞ்சலகத்தை ஐஐடி இயக்குநர் காமகோடி திறந்து வைத்தார். சென்னை ஐஐடியில் ஏற்கனவே இருந்த வளாக தபால் நிலையத்தை இதன்மூலம் மறுசீரமைப்பு செய்து மாணவர்கள் மற்றும் இளம் பயனாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காபி விற்பனை இயந்திரம், இலவச வைபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பிற பயனாளர் சார்ந்த வசதிகள் போன்ற கூடுதல் வசதிகள் மாணவர்கள் மற்றும் இளம் பயனாளர்களுக்கான ஏற்பாடுகள் இதில் செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஐஐடி இயக்குநர் காமகோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் செல்ல முடியாத இடத்திற்கெல்லாம் தபால் அனுப்ப வேண்டும் என்றால் ஸ்பீடு போஸ்ட் தவிர வேறு வழியில்லை. பல கல்வி நிறுவனங்களில் இது போன்ற தபால் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஐஐடி பேராசிரியர்களால் நடத்தப்படும் கல்வி சக்தி திட்டத்தை கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கும் கொண்டு செல்வதற்காக இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி கிராமப்புற தபால் நிலையத்தில் அமைத்து தர வேண்டும். அதன் மூலம் ஐஐடியின் பாடத்திட்டங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையும்.
