கடன் செலுத்தியும் பணம் கேட்டு மிரட்டல் பெண் தற்கொலை

நீடாமங்கலம், ஜன. 27: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் ஊராட்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி பரிமளா(40). செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பரிமளா விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பரிமளாவின் கணவர் செந்தில்குமார் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நான் வெளிநாட்டில் இருந்த போது பரிமளா வீட்டு உரிமையாளர் கலைராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ஈடாக பத்திரம் மற்றும் புரோநோட் ஆகியவற்றில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். பிறகு வட்டி மற்றும் அசலை அடைத்துள்ளார். கடனை அடைத்த பின் பத்திரத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டனர. புரோநோட்டை திருப்பி தராமல் எங்களுக்கு மேலும் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்துப் போன பரிமளா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: