சென்னை: மும்பைக்கு வருவேன் என் காலை வெட்டிப்பாருங்கள் என்று ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது, \”மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை;
அது ஒரு சர்வதேச நகரம்\” என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, \”தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.
வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?\” என்று ஆவேசமாக தெரிவித்தார். இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, \”மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே இங்க் அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். இங்க் அடித்துப் பாருங்கள்.
இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயந்து இருந்தால் நான் என் ஊரில் தான் இருந்திருக்க வேண்டும். மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். காமராஜரை இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று சொன்னால் அவர் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா? மும்பை உலகத்தின் தலைநகரம் என சொல்வது மராட்டியர்களால் கட்டிய நகரம் என்று ஆகிவிடுமா?” என்று பதில் அளித்துள்ளார்.
