- சென்னை
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- அண்டைத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை
- சென்னை வர்த்தக மையம்
- நந்தம்பாக்கம், சென்னை…
சென்னை: பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடந்த “அயலகத் தமிழர் தினம் – 2026” விழாவில், பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட இரட்டைத் தள மின்சார பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடியில் ஒரு இரட்டைத் தள மின்சார பேருந்து ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்ட இப்பேருந்தின் சேவையை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
இந்த பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள், சென்னை நகரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டிடக் கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகம் – எல்ஐசி – ஸ்பென்சர் பிளாசா – மக்கா மஸ்ஜித் – பி.ஓர்.ஆண்ட் சன்ஸ் (வாட்ச் டவர்) – பல்லவன் சாலை – பாடிகார்டு முனீஸ்வரர் கோயில் – ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை உயர் நீதிமன்றம் – தலைமைச் செயலகம் – ரிசர்வ் வங்கி – சென்னை துறைமுகம் –
வெற்றி போர் நினைவுச்சின்னம் – நேப்பியர் பாலம் – பேரறிஞர் அண்ணா – கலைஞர் – முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்கள் – மெரினா கடற்கரை – கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் கடற்கரை – சாந்தோம் தேவாலயம் – அகில இந்திய வானொலி – கலங்கரை விளக்கம் – காவல்துறை தலைமை அலுவலகம் – குயின் மேரீஸ் கல்லூரி – விவேகானந்தர் இல்லம் – பிரெசிடென்சி கல்லூரி – எழிலகம் – சென்னை பல்கலைக்கழகம் – தூர்தர்ஷன் கேந்திரா –
ராஜாஜி மண்டபம் – ஓமந்தூரார் அரசு மருத்துவமனை – சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகம் ஆகிய வழித்தடங்களில், நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் பனோரமிக் பார்வை வசதியுடன் இப்பேருந்தின் சேவை இயக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர்,
சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் கிறிஸ்துராஜ், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஷேனு அகர்வால், குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் வீர வேணுகோபால், ஸ்விட் மொபைலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ்மணி, அயலகத் தமிழர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
