ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

ஊத்தங்கரை, ஜன.26: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான முத்துசாமி தலைமை வகித்தார். ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரன் மாநில பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ரக்ஷீத் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில அமைப்புச் செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கலைச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணேசன் நன்றி கூறினார்.

தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி கூறுகையில், பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ் தொன்மையான மொழி என திருக்குறளை உதாரணம் காட்டி பல இடங்களில் சிறப்புரையாற்றுகிறார். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெற வேண்டும். பிடிக்கப்பட்ட சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: