மார்கழி மாத பூச ஜோதி தரிசனம்

 

வடலூர், ஜன. 5: வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் மாத பூச ஜோதி தரிசனம் பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று இரவு
7.45 மணி முதல் 8.45 மணி வரை சத்திய ஞானசபையில் ஆறு திரைகளை நீக்கி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் செய்தனர். மேலும் இதனை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர்.
ஜோதி தரிசனத்தை தொடர்ந்து தர்மச்சாலை, சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் கடைசி மாத பூசம் என்பதும், பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச பெருவிழா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: