மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் பொன்.முத்துராமலிங்கம் பேட்டி

மதுரை, ஜன. 24: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கடந்த டிச.21 முதல் ஜன.23 (நேற்று) வரை 21 ஆயிரத்து 500 மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு கோடியே 5 லட்சம் பேர், அதிமுகவை நிராகரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களின் எடை சரியாக இல்லை.

குடிநீர் சரியாக வருவதில்லை. பாதாள சாக்கடை வசதி இல்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பெரும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் சம்பளம் ரூ.15 ஆயிரத்தை முழுமையாக தராமல் ரூ.11 ஆயிரத்து 500 வழங்குவதாகவும், பாக்கியை இடையில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, வேலை ஆரம்பிக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்’ என்றார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, முகேஷ் சர்மா, பல்ராம் தனுஷ்கோடி, தமிழரசி, பஷிர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: