ஊட்டி தாவரவியல் பூங்கா: கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர் அலங்காரம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது விதைப்பு பணி மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மலர் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பால்சம், பிகோனியோ, சைக்ளோமென், ஆர்க்கிட் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: