கிருஷ்ணகிரி, டிச.27: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெரியபேட்டையை சேர்ந்தவர் வாசிப்(43). இவர் தனது மனைவி நாதியா(37), மகன்கள் முஷாப்(11), ஜியாத்(3) ஆகியோருடன் காரில் நேற்று வாணியம்பாடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றனர். மாலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே சென்னை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையின் நடுவில் திடீரென ஒருவர் ஓடியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் வந்த நால்வரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி கெட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி(45) என்பதும், இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரியவந்தது. சாலையோரம் நடந்து சென்றவர், திடீரென்று சாலையின் குறுக்கே ஓடியதால், கார் மோதிய விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
