மகள் பேசுவதை நிறுத்தியதால் தாய்க்கு மிரட்டல் விடுத்த வாலிபர்கள் கைது

கோவை, டிச. 23: மகள் பேசுவதை நிறுத்தியதால், தாய்க்கு மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் ஜான் வில்லியம் (36). இவரது மனைவி பிரபாவதி (32). இவர், ஸ்பாவில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (22). அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பிரபாவதியின் மகளிடம் முகேஷ் பேசி வந்துள்ளார். இதனை பார்த்த பிரபாவதி, தனது மகளை கண்டித்து முகேசுடன் பேசுவதை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அதன் பின்னர் முகேசுடன் பேசுவதை அந்த பெண் தவிர்த்தார். கடந்த 20ம் தேதி பிரபாவதி வீட்டின் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமார் (22), அபிஷேக் (23) ஆகியோர் பிரபாவதியை தடுத்து நிறுத்தினர். அவரிடம் எதற்காக உங்கள் மகளை என்னிடம் பேச வேண்டாம் என்று கண்டித்தீர்கள்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த முகேஷ் தகாத வார்த்தைகளால் பிரபாவதியை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரபாவதி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாவதியிடம் தகராறில் ஈடுபட்ட முகேஷ், அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: