முதுகுளத்தூர் பகுதியில் 8 மணிநேர மின்தடையால் முடங்கிய அலுவலக பணிகள்

சாயல்குடி, ஜன.20: முதுகுளத்தூர் பகுதியில் அலுவலக நாட்களில் ஏற்படும் மின்தடையால் அரசு அலுவலகம், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்  கூறுகின்றனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தாலுகா அலுவலகம், யூனியன், சார்பதிவாளர், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், கருவூலம், வங்கிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை(சான்றுகள்) வழங்க அரசு அனைத்தையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் மாதந்தோறும் பராமரிப்பு காரணமாக சனிக்கிழமைகளில் மின்தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக அலுவலக வேலை நாட்களில் மின்தடை ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது.

முதுகுளத்தூரில் நேற்று சுமார் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அலுவலகம், வங்கி பணிகள் முடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் அவதிப்பட்டதாக கூறினர். எனவே வருகின்ற மாதங்களில் விடுமுறை தினங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின்தடை குறித்து முன் அறிவிப்பு செய்ய மின்சாரம் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: