32வது சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்த கலெக்டர்
திருப்பூர், ஜன. 19: 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினையொட்டி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வாகன ஓட்டிகளுக்கு நேற்று திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வினியோகித்தார். தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று(18ம் தேதி) முதல் வரும் பிப்.17ம் வரை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில், அவிநாசி ரோடு பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் நேற்று வாகன ஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியவர்களுக்கு ரோஜா மலர் வழங்கினர். இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் சுரேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வடக்கு குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.