*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி : தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் அலங்கார செடிகளை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்து காணப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, கோடை காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவை தயார் செய்யப்படும். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் பல்வேறு அலங்கார செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொலைவில் இருந்து பார்க்கும்போது மலர் அலங்காரங்களை போன்று காட்சியளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
