காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி திருட்டு முயற்சி எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

காஞ்சிபுரம், டிச. 3: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில் தங்க பல்லி, தங்க சந்திரன், தங்க சூரியன், வெள்ளி பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இவற்றை திருட முயற்சி நடந்துள்ளதாக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து திருட்டுத்தனமாக, தங்க பல்லி உள்ளிட்ட சிலைகளை மாற்ற முயற்சித்துள்ளனர். அது ஆகம விதிகளுக்கு முரணானது. இதை அறிந்து கோயிலுக்கு சென்று பார்த்தபோது, தங்க பல்லி சிலைகள் மாயமாகியிருந்தது.

எனவே, இதுகுறித்து காவல் துறையிடம் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிலை திருட்டு நடைபெறவில்லை என தெரிய வந்ததையடுத்து புகாரை முடித்து வைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: