கூடலூர், ஜன.7: கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தோட்டக்கலை துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளிடையே கூட்டங்கள் நடத்தி புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கவும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் என்ற திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலுவலர்கள் விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தியும் பயிற்சி அளித்தும், பள்ளிகள் மூலமும், சுற்றுலாக்கள் மூலமும் நவீன தொழில் நுட்பங்களையும், திட்டங்களின் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள். ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகள் இதில் தேர்வு செய்து பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும் பயிற்சிகளும் உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.