வேலூர், ஜன.5: வேலூர் மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2,500 ரொக்கம் வினியோகிக்கும் பணியை நேற்று வேலூரில் அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாநிலத்தில் அரிசி பெறும் 2 கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ₹2,500 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 10 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ₹5,604 கோடி நிதியையும் அரசு ஒதுக்கியது. அதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று காலை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2,500 ரொக்கம் வழங்கும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 345 இலங்கை அகதி தமிழர் குடும்பங்களுக்கான கார்டுகள் உட்பட மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 339 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பையும், தலா ₹2,500 ரொக்கத்தையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் அண்ணா சாலை கற்பகம் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.