தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பங்கேற்பு

நெல்லை, ஜன. 4: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நெல்லை சரகத்திலுள்ள நான்கு மாவட்டங்களிலுள்ள எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தலைமை வகித்தார். நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது எங்கெல்லாம் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையாக சட்டம் ஒழுங்கிற்கு இடையூறாக உள்ள கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைப்பது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். எஸ்பிக்கள், போலீஸ் உயரதிகாரிகள் எவ்வாறு திட்டமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் எஸ்பிக்கள் நெல்லை மணிவண்ணன், தூத்துக்குடி ஜெயகுமார், தென்காசி சுகுணாசிங், கன்னியாகுமரி பத்ரிநாராயணன் மற்றும் ஏடிஎஸ்பி சுப்பாராஜ் மற்றும் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: