வாடிக்கையாளர்கள் அவதி பாபநாசம்அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர் நியமிக்க வேண்டும்

பாபநாசம், ஜன.4:  தஞ்சை மாவட்ட நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்புச் செயலணியின் கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். முன்னதாக செயலர் மார்ட்டின் வரவேற்றார். பொருளாளர் யமுனாதேவி பிரசன்னா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தஞ்சாவூரில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் தமிழக அரசால் நுகர்வோர் குறைதீர் ஆணையமாக மாற்றப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, பாபநாசம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும். இரவு நேரத்தில் மருத்துவர் மருத்துவ மனையில் தங்கி பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ ஆலோசனை கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னுக்குடி வாய்க்கால், திருப்பாலைத்துறை வாய்க்கால் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் கடை வீதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுப்பிரமணியன், ஆல்பா உள்ளிட்ட  உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related Stories: