செங்கல்பட்டு: செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இச்சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசிக்கிமுத்து (22), தங்கதுரை (22) கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது பயத் (22) ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக புதிய கட்டிட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு உணவு சாப்பிடுவதற்காக 3 பேரையும் திறந்து விட்டனர். அப்போது 3 பேரும் மற்றொரு கைதியான கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் நாயக் (25) என்பவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். உடனே சிறைக்காவலர்கள் ஓடி வந்து ராஜேஷ் நாயக்கை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து துணை சிறை அலுவலர் புகழரசி, கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த கைதிகள் புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
