பரமக்குடி, ஜன.1: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட தொகுதிகளில் முதல்கட்டப் பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் தொழிலாளர்கள்,வேளாண் குடிமக்கள் மற்றும் விவசாயிகள், மீனவர்கள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுகிறார்.
இதற்காக நாளை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், பரமக்குடியில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான உதயகுமார், முதலமைச்சரை வரவேற்பது, பேசும் இடங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, நாகநாதன், முத்தையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், பரமக்குடி நகர அம்மா பேரவை செயலாளர் வடமலையான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.