ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்ற பிரெட்ரிக் காலமானார்: தயான் சந்த் விருது பெற்றவர்

கண்ணூர்: கடந்த 1972ம் ஆண்டு மூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்று வெண்கலப்பதக்கம் பெற்ற இந்திய ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இடம்பெற்றிருந்த கேரள வீரர் மேன்யுவல் பிரெட்ரிக் (78) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 1972ம் ஆண்டு மூனிச் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அதில் இந்தியா சார்பில் இடம்பெற்றிருந்த ஹாக்கி அணியில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மேன்யுவல் பிரெட்ரிக் கோல் கீப்பராக ஆடினார்.

ஹாலந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடி வெண்கலப்பதக்கம் பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் கேரள வீரர் என்ற பெருமையை பிரெட்ரிக் பெற்றார். இந்திய அணிக்காக 8 ஆண்டுகள் ஆடியுள்ள பிரெட்ரிக், 2019ம் ஆண்டு, தயான் சந்த் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரெட்ரிக் நேற்று காலை காலமானார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

Related Stories: