அரியலூர், டிச. 31: அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. பொது இடங்களில் கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவானது பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் இன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் இன்று இரவு முதல் அனைத்து சாலைகளிலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளதால் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.