கரூர், டிச. 31: கரூர் ஜவஹர் பஜார் சாலையில் குடிநீர் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரி வர மூடாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் பழைய திண்டுக்கல் சாலையோர பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளம் சரிவர மூடாமல் அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட தூரம் சாலை மேடும் பள்ளமுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சாலையை இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் எளிதில் கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பகுதிச் சாலையை திரும்பவும் சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.