தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 1.60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 21 ஆயிரத்து 500 ஏக்கரில் அறுவடையும், ஏறத்தாழ 50 ஆயிரம் டன் நெல் கொள்முதலும் செய்யப்பட வேண்டியுள்ளது. தற்போது 14 லட்சம் சாக்குகள் கையிருப்பில் உள்ள நிலையில், 66 லட்சம் சாக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.
நாள்தோறும் 5 ஆயிரம் டன் நெல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 4 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் ஒரு லட்சம் டன்னும், வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகளில் 30 ஆயிரம் டன்னும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது தினமும் 1,250 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்பி வருகிறோம். சரக்கு ரயில்கள் மூலம் தினமும் 8 ஆயிரம் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. எதிர்கட்சி தலைவர் ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காக நெல் முளைத்துள்ளதாக கூறுகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன்தான் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட 3 மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒரு நாளைக்கு 800லிருந்து 1,000 மூட்டைகள் என்பதை நிரந்தர உத்தரவாக பிறப்பித்தார்.
மூட்டைகளை கொண்டு செல்வதற்கான லாரிகள் இயக்கத்தில் சுணக்கம் இல்லை. விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில் கலக்கப்பட வேண்டிய செரியூட்டப்பட்ட அரிசி வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம். அதாவது 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி கடந்த 29.7.25 அன்று மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. பின்னர் டெண்டர் விடப்பட்டு 5 ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் மெ.டன் நெல்கள் வாங்கிய நிலையில் அவற்றில் 100 கிலோ விதைக்கு 1 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது.
இதற்காக அந்த ஒப்பந்ததாரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை பதிவேற்றம் செய்துள்ளனர். டெல்லியில் உள்ள குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் அதனை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க முடியும். இதுவரை மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி வரவில்லை. அனுமதி வந்த பிறகு செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு விடும். எனவே நெல் மூட்டைகள் தேக்கத்திற்கு ஒன்றிய அரசுதான் காரணம். இது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
