மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் தனிப்படை போலீஸ் டிரைவர் கைது: நீதிமன்றம் உத்தரவால் சிபிஐ நடவடிக்கை

மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் மதுரை நீதிமன்ற உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரின் வாகன டிரைவர் ராமச்சந்திரனை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை, மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதி ஜோசப் ஜாய் முன் சிறையில் உள்ள 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தனிப்படை போலீசாரின் டிரைவர் ராமச்சந்திரனும் ஆஜரானார். அப்போது இவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் உள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதால் அவரையும் கைது செய்ய வேண்டும். அவரை வரும் 31ம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக். 31க்கு தள்ளி வைத்தார். இதையடுத்து டிரைவர் ராமச்சந்திரனை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது.

Related Stories: