திருப்பூர் அருகே பாத யாத்திரை சென்ற முதியவர் பைக் மோதி பலி

திருப்பூர், டிச.27: ஈரோடு நம்பியூரை சேர்ந்தவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றபோது திருப்பூர் அருகே நேற்று காலை  பைக் மோதி பலியானார்.ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா பொங்கியனூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (83). இவர், பழனிக்கு பாத யாத்திரையாக செல்ல, 20 பேர் கொண்ட குழுவுடன் கிளம்பினார். சொந்த ஊரில் இருந்து திருப்பூர் வழியாக பழனி செல்ல முடிவு செய்து கடந்த 24ம் தேதி திருப்பூர் வந்தனர்.

அங்கு கோவில்வழி அருகே உள்ள பாத கருப்பராயன் கோயிலில் தங்கினார். பின்னர், காளியப்பன் அனைவருக்கும் முன்னதாக கிளம்பி தாராபுரம் ரோட்டில், புதுரோடு பஸ்ஸ்டாப் அருகே நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த பைக் காளியப்பன் மீது மோதியது.இதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் அறிவுறுத்தல்: விபத்தில் பலியான காளியப்பன் பாத யாத்திரை சென்றபோது, அவர் ரிப்லெக்ட் கவசம் அணிந்திருக்கவில்லை. இதனால், விபத்தில் இறந்தார். பக்தர்கள் பாதயாத்திரையின் போது இரவு நேரங்களில் சாலையோரம் நடந்து செல்லும்போது, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் விதமாக ரிப்லெக்ட் உடை அணிந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: