தூத்துக்குடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

தூத்துக்குடி, டிச. 27:தூத்துக்குடி மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்துள்aளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கும் போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு, சமூக விரோதிகள் தப்பிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

இந்திய - இலங்கை கடல் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மீறி மீன்பிடிக்கும் படகுகளுக்கு ரூ.1,000, 2,500, 5ஆயிரம் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். 4வது முறை எல்லை கடந்து மீன்பிடித்தால் ஒரு வாரத்திற்கு மீன்பிடிக்க  தடைவிதிக்கப்படும். நான்கு முறைகளுக்கு மேல் எல்லை கடந்து மீன்பிடித்தால் படகு உரிமம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: