ஈரோடு, டிச.26: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஏகாதசி விழா கடந்த 15ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சியளித்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை 4:45 மணிக்கு நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளையொட்டி ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக நுழைந்து, முன் மண்டபம் வழியாக பரமபத வாசலை கடந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கமலவள்ளி தாயார் மற்றும் உற்சவரை தரிசனம் செய்த பின் கோயிலில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.