அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.23: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனே துவங்க கோரி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்கிட வேண்டும், அகவிலைப்படி உயர்வினை உடன் வழங்கிட வேண்டும், வழக்கமாக வழங்கப்படும் தீபாவளி போனஸ் 20 சதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள 10 சதவீதத்தினை வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தொமுச முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலர் சேகர், கிளை தலைவர் மணிகண்டன், சிஐடியூ மத்திய சங்க இணைச் செயலாளர் மோகன், கிளை தலைவர் செங்குட்டுவன், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், ஏஐடியூசி சங்க கிளை தலைவர் தங்கமணி, விடுதலை சிறுத்தைகள் சங்க பொறுப்பாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: