அறந்தாங்கி, டிச.23: அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களை திரட்டி சிறப்பாக நடத்த வேண்டும் என ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டத்தில வலியுறுத்தப்பட்டது.
திமுக அறிவித்துள்ள அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களை ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏவுமான உதயம்சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக அறிவித்துள்ள அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பிலான கிராமசபைக் கூட்டங்களை ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மக்களை திரட்டி சிறப்பாக நடத்துவது. கூட்டத்தில் அதிமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது. திமுக ஆட்சியில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக் கூறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை, மாநில திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் துரைமாணிக்கம், முன்னாள் மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.